Saturday, September 5, 2009

மேலநெடும்பூர் - தொடரும் ஊர்மணம்..

கடந்த பதிவில் மணம் கமழும் மகிழம் மரம் வீழ்ச்சி பற்றி வருந்தி விளம்பியிருந்தேன். இனி தொடர்வோம்..

இந்த சிவன் கோவில் எதிரே ஒரு பெரிய குளம் உள்ளது , இங்குதான் நான்
'ஓரி ஒரி எல்லாருக்கும் போட்டேன்
உனக்குமட்டும் போடல'
எனப்பாடி நான் நீச்சல் கற்றது. அந்த நாட்கள் மிக மகிழ்ச்சியானவை எருமை மாடுகள் மூழ்கி கிடக்கும் சித்திரை வெயிலில் நாங்களும் இந்த குளத்தில் பல மணி நேரம் குதியாலம் போடுவோம். எருமை மாடுகளின் தலையில் நிறைய பூச்சிகள் இருக்கும் அவற்றை தலையில் ஏந்தி மற்றவர்களின் தலையில் விடுவது ஒரு வகை விளையாட்டு. பெரிய பெரிய ஆட்களெல்லாம் இந்த 'ஓரி' விளையாட்டில் பங்கெடுப்பார்கள். நாங்கள் விளையாட்டை முடித்து வரும் போது குளத்தை ரெண்டாக்கியிருப்போம். இன்றைய தேதியில் இந்த குளம் மீன் வளர்க்கும் குட்டையாக மாறி குளிக்க தகுதியற்றதாக மாறிவிட்டது.

இந்த குளத்திற்கு கிழக்கே ஒரு பெத்தான் கோயில் உள்ளது இங்கும் ஒரு குட்டை(சிறிய குளம்) உள்ளது, இங்கு யாரும் குளிக்கமாட்டார்கள் ஒரு காலத்தில் குடி தண்ணீர் இங்கிருந்துதான் எடுப்பார்கள் என்று நான் கேள்விபட்டிருக்கிறேன். இந்த இடத்தில் ஒரு அய்யனார் குதிரை இருக்கும் நல்ல உயரம் சுமார் 10 அடி உயரம் இருக்கும்(இன்னும் இருக்கான்னு தெரியல). இந்த குதிரைக்கு கீழேதான் திருட்டு சீட்டு கட்டு விளையாடுவோம், புகையிலை பேப்பரை பணமாக பந்தயம் கட்டி விளையாடுவோம். இந்த இடங்களையெல்லாம் ஒளிப்படமாக எடுத்து வைக்கவேண்டும் என்பது என் ஆவல், என்ன செய்ய அந்த கால கட்டத்தில் இதற்கான பொருளாதர வசதியும், இந்த இடங்களெல்லாம் ஆவணப்படுத்தப்படவேண்டியவை என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டதில்லை. இந்த கோயிலிருந்து பார்த்தால் கீழநெடும்பூர் கிராமம் தெரியும் இங்கிருந்து நடந்தால் குறுக்கே 1/2 மைல் தூரம்தான் இருக்கும்.









Sunday, May 10, 2009

எங்கள் ஊர்'வலம்'

கடந்த பதிவின் தொடர்ச்சியாக எங்கள் ஊரின் வனப்பை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

வடக்கிலிருந்து வந்தால் சாவடி மதகை தாண்டிதான் வர வேண்டும், இந்த சாவடி மதகு வீராணம் ஏரியிலிருந்து வரும் வாய்க்காலின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்தான் எங்கள் ஊர் மற்றும் கீழ நெடும்பூர்,மெய்யாத்தூர் கிராமங்களின் விவசாயத்திற்கான உயிர் நாடி. 

இந்த மதகு பன்முகம் கொண்டது வாகனங்களூக்கும் பாதசாரிகளுக்கும் பாலமாகவும், விவசாயிகளுக்கு கதிர் அடிக்கும் களமாகவும் என் போன்ற சிறுவர்களுக்கு குதித்து விளையாடும் சறுக்கு மதகாகவும் அவ்வப்போது இதன் பயன்பாடு மாறும். 

அப்படியே உள்ளே வந்தால் அங்கிருந்துதான் ஊரின் எல்லை ஆரம்பிக்கிறது. சாலைக்கு இடப்புறம் ஒரு சிமெண்ட் பலகை ஊரின் பெயரை தாங்கி நிற்கும். வலப்புறத்தில் ஒரு பத்து வீடுகள் கொண்ட ஒரு சிறிய காலனி ஒன்று இருக்கும், அந்த காலகட்டத்தில் மின்சார வசதி கிடையாது இந்த தெருவிற்கு. (இந்த மின்சாரமும் ஒத்தை விளக்கும் பற்றி தனி பதிவே போடலாம்.) இன்று வந்ததா என எனக்குத்தெரியாது.
இந்த காலனிக்கு தனியாக பெயர் ஏதும் இல்லை, சாவடித்தெரு என்றுதான் சொல்வார்கள்.

அப்படியே வந்தால் மூக்காயி முக்குட்டு (மூக்காயி என்பவரின் வீடு இந்த முனையில் இருப்பதால் இந்த பெயர் என்று நினைக்கிறேன்) வரும் அங்கிருந்துதான் நிறைய வீடுகள் தென்படும். இங்கிருந்து சில வீடுகள் தள்ளி இடது புறம் ஒரு சின்ன சாலை செல்லும் இதுதான் பெரிய தெரு செல்லும் வழி. இந்த தெருவில் ஒரு சுமாராக 100 குடும்பங்கள் வசிப்பார்கள்.  

அடுத்து வருவது 'சாணாமுட்டு தெரு' (சாண மேட்டு தெரு மருவி இப்படி ஆகியிருக்குமோ) இங்குதான் ஒரு சமூகத்தை சேர்ந்த பெருவாரியான மக்கள் வசிக்கிறார்கள்.
இந்த தெருவின் முடிவில் மணத்தொறை(மண்துறை) இங்கிருந்துதான் அடுத்த சமூக மக்கள் வசிக்கிறார்கள்.

சிவன் கோயில் தெரு இங்கு பிள்ளைமார் மற்றும் அய்யர்கள் வசித்தனர், இன்றைய தேதியில் எவரும் இல்லை இங்கே. இவர்களின் வீடுகள் இன்று படையாண்ட வழி வந்தவர்களின் கைமாறி அவர்கள் இங்கே வசிக்கிறார்கள்.

இந்த சிவன் கோவில் தெரிவில்தான் எங்களின் தற்போதைய வீடு உள்ளது. ஆனால் எனக்கு பிடித்தமான நான் சிறுவனாய் குழந்தையாய் தவழ்ந்த வீடு அடுத்த தெருவில் உள்ளது. அவ்வீடு பற்றி அவ்வப்போது ஆங்காங்கே சொல்வேன்.

இந்த சிவன் கோவில் தெருவிற்கு எதிரில்தான் மிகப்பெரிய சிவன் கோவில் உள்ளது, இந்த கோயில்தான் நீங்கள் படத்தில் காண்பது. 

இந்த கோவில் பற்றி ஏராளமான நினைவுகள் என்னிடம் உண்டு. இது வெறும் கோவில் மட்டுமன்று, விவசாயிக்கு மழை நாளில் கொடவுனாகவும், எல்லா நெல்லையும் இந்த கோயிலில்தான் கொட்டி உலர்த்துவார்கள், வெயில் காலங்களில் நாங்கள் இளைப்பாறவும், விழாக்காலங்களில் நாங்கள் கொண்டாடவுமான ஒரு நினைவுச்சின்னம், இன்று பாழடைந்து போனாலும் ஒரு காலத்தில் மிகவும் சிறப்புற்று இருந்தது, இந்த கோயிலுக்கு முன் இரண்டு பெரிய மகிழம் மரம் இருந்தது அவைதான் இந்த கோவிலுக்கு அழகு, நான் 10 ஆம் வகுப்பு ஒரு மரம் வீழ்ந்தது அடுத்த மரமும் சில வருடங்களூக்குப் பிறகு விடை பெற்றுக்கொண்டது.

Saturday, May 9, 2009

எங்கள் ஊர் - ஒரு அறிமுகம்

மேலநெடும்பூர் - காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இது காட்டுமன்னார்குடியிலிருந்து வடக்கே 9 கி.மீ தொலைவிலும் சிதம்பரத்திலிருந்து  தெற்கே 14 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலநெடும்பூரின் எல்லைகளாக கிழக்கே கீழநெடும்பூரும் மேற்கே கலியந்தூர்/நெய்வாசல் மற்றும் தெற்கில் விளத்தூர்/சோழக்கூர் வடக்கில் கொத்தவாசல் என செழிப்பான கிராமங்கள் சூழ அமைந்துள்ளது. பண்டைய சோழ வள நாட்டின் சோறுடைத்த கிராமம் இந்த மேலநெடும்பூர் என்பது என் யூகம். இது வரலாற்றில் எங்கேயானும் குறிப்பிடப்பட்டுள்ளதா என நான் அறியேன். யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டமிடுங்களேன்.

இது ஒரு சிறிய கிராமம் சுமாராக 300 குடும்பங்கள் வசிக்கும் என்பது என் தோராய கணக்கு. எப்படியும் 1000 பேருக்கு மேல் வசிக்க வாய்ப்பில்லை. விவசாயம்தான் முக்கிய தொழில், பெரும் செல்வந்தர்கள் என சொல்லக்கூடிய அளவுக்கு எவருக்கும் அதிக அளவில் நிலம் கிடையாது, அதிகப்பட்சமாக 20 காணிக்கு மேல் இருக்காது ஒருவருக்கு. 

பெருந்தலைவர் காமராசர் கொடையளித்த ஒரு துவக்கப்பள்ளி உண்டு, ஆரம்ப காலங்களில் இந்த பள்ளி உள்ளூர் பெரும்சாதிக்காரர்களால் தவிர்க்கப்பட்டாலும் 1980களில் இதன் தரம் ஒரு அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்(திரு. செல்வராசு அவர்கள்) ஒருவரால் மிகவும்  உயர்த்தப்பட்டது. அது முதல் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களிலிருந்தும் சிறார்கள் இங்கு வரத் தொடங்கினர்.

என் இளமைப்பருவ காலங்களில் சாதிகள் இருந்தாலும் சாதீயம் அவ்வளவாக தலை தூக்கவில்லை, ஆனால் 1980களின் இறுதிகளில் இருந்து இங்கும் சாதி வாரி அரசியல் தலை தூக்கியது, மருத்துவர் அய்யா ராமதாசும் அண்ணன் திருமாவளவனும் அந்த பெருமையை தேடிக்கொண்டார்கள். என் பதிவுகள் பெரும்பாலும் 1990களூக்கு முன் நடந்த நிகழ்வுகளைப்பற்றியதாக மட்டுமே இருக்கும்,  ஏனெனில் 1987க்குப் பிறகு உயர்கல்வி மற்றும் வேலை நிமித்தம் காரணமாக என் கிராமத்துக்கு நான் விருந்தாளியானேன்.

எனக்குத்தெரிந்துதான் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி வந்தது, முதல் பேருந்து ஒரு தனியாரின் வண்டி 'ராஜா டிரான்சுபோர்ட்' என்ற பெயரில் 1979 அல்லது 80 வாக்கில் வந்ததாக ஞாபகம்.  இது சிதம்பரம் To  மா. உடையூர் சென்று வந்தது, இந்த வழித்தடம் இன்றும் உள்ளது ஆனால் பேருந்தின் பெயர்தான் (ராஜா,அகச்தியர்,சரவணா..) மாறி மாறி இப்போ ஏதோ ஒரு பெயரில் இன்றும் வசூல்ராஜாவாக வலம் வருகிறது, அடுத்து அரசு பேருந்து 'தந்தை பெரியார்' 1984 அல்லது 1985ல் வந்ததாக ஞாபகம். இதன் தடம் எண் 22 (சிதம்பரம் டு காட்டுமன்னார்குடி)இன்று அரசுப் பேருந்தாக பெயர் மாறினாலும் இன்றும் இளமையாக தன் பயணத்தை தொடர்கிறது. 

மற்ற விவரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில்.